நமஸ்காரம்/ஆசீர்வாதம்.
இந்த இதழ் அச்சிற்கு சென்றிடும் தருணத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. இந்த முடிவுகளில் திமுக மற்றும் அஇஅதிமுக கூட்டணிகளை விட நடிகர் திரு.விஜய் அவர்களுடைய தமிழக வெற்றிக் கழகம் மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கின்ற அடிப்படையிலும், மற்றும் ஜனநாயக நடைமுறைகளின்படியும், நாம் இந்த தேர்தல் முடிவுகளை வரவேற்று ஏற்கின்றோம். வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கும் நமது நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம். பொறுப்பு ஏற்க இருக்கின்ற புதிய அரசு தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிடும் என்று நம்பிக்கையுடன் எதிர்நோக்கிடுவோம்.
ஸம்ஸ்க்ருத மொழியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும்
“ஸம்ஸ்க்ருத பாரதி”
பிராமண சமூகத்தினருக்கு அவரவர் தாய்மொழியும், ஸமஸ்கிருதமும் இரண்டு கண்கள் போன்றவை என்பதனை நாம் யாவரும் அறிவோம்.
தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக ஸமஸ்கிருத மொழி கற்பதற்கு அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகின்றது.
அதே சமயம் CBSE பள்ளிகளிலும் KV பள்ளிகளிலும் ஸமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுகின்றது என்பது ஓரளவு திருப்தி அளித்தாலும், ஸமஸ்கிருத மொழியினை நாம் மட்டுமின்றி அனைத்து ஹிந்துக்களும் கைவிட்டு விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருந்திட வேண்டும். ஏனெனில் சனாதன தர்மமான ஹிந்து தர்மத்தில் ஸமஸ்கிருத மொழிக்கு மிக முக்கியமான இடத்தினை நம்முடைய முன்னோர்கள் அளித்து வந்துள்ளனர்.
அத்வைத, விசிஷ்டாத்வைத மற்றும் த்வைத சித்தாந்தங்களை சார்ந்த ஆச்சார்ய மகனியர்களும் ஸம்ஸ்கிருத மொழியின் முக்கியத்துவத்தினையும் அதனை மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் குறிப்பாக இருந்து வந்துள்ளனர்; அறிவுறுத்தியும் வருகின்றனர்.
நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருப்பது “ஸமஸ்க்ருத பாரதி” அமைப்பு ஸமஸ்கிருத மொழியினை மக்களுக்கு எடுத்து செல்லுகின்ற பணியினை மிகப்பெரும் அளவில் முன்னெடுத்து வருவது தான்.
சமீபத்தில் விஜயபாரதம் தேசிய வார இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையினை கீழே கொடுத்துள்ளேன்:
ஸம்ஸ்க்ருத பாரதி என்ற அமைப்பானது, 1981ம் ஆண்டு பெங்களூர் நகரில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய முயற்சியாக தொடங்கிய இவ்வமைப்பு, இன்று பாரதத்தில் மட்டும் அல்லாமல், உலகின் பல நாடுகளிலும் மிகப் பெரிய மொழி இயக்கமாக வளர்ந்துள்ளது.
ஒரு காலத்தில் வாய்மொழியாக இருந்த ஸம்ஸ்கிருதம், காலப்போக்கில் நூல்கள் மற்றும் சடங்குகளுக்குள் மட்டுமே சுருங்கியது. இதை மாற்றி, ஸம்ஸ்க்ருதத்தை மீண்டும் பேசப்படும் மொழியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இந்த அமைப்பு தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம், ஸம்ஸ்கிருதத்தை எளிய முறையில் பேசவும், எழுதவும் கற்றுத் தரப்படுகிறது.
அனைத்து தரப்பினரையும் மொழியுடன் ஒருங்கிணைக்கவும், பண்பாடு மற்றும் பாரதத்தின் கலாச்சார மதிப்புகளை மொழி வழியாக பரப்பவும், ஸம்ஸ்க்ருத பாரதி பாடுபட்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களிடம் ஸம்ஸ்க்ருத மொழியை கொண்டு செல்கிறது.
மிகக் குறுகிய காலத்தில் பேசக் கற்றுத் தரும் முகாம்கள் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
வாராந்திர வகுப்புகள் மூலமாகவும் தொடர்ச்சியான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
புதிய பயிற்றுவிப்பாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன், பல பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் நடைபெற்று வருகின்றன.
குழந்தைகளுக்கான மொழி மற்றும் பண்பாட்டு வகுப்புகள் எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
பகவத் கீதையை எல்லோருக்கும் வாழ்க்கை வழிகாட்டியாக கற்பித்து வருகிறது.
அஞ்சல் வழி ஸம்ஸ்க்ருதம் மற்றும் ஆன்லைன் கல்வி முறைகள் மூலம், வீட்டிலிருந்தே அனைவரும் கற்றுக் கொள்ள ஏதுவாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
சர்வதேச குறும்பட விழா, நவீன ஊடகத்தில் ஸமஸ்கிருத மொழியில் காணொளி வாயிலாக குறும்படம் எடுக்க ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
ஸம்ஸ்க்ருத பாரதி அமைப்பு மூலம், அனைத்து மாநிலங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல நாடுகளிலும், அமைப்பின் செயல்பாடுகள் விரிவடைந்துள்ளன.
தமிழ்நாட்டில், ஸம்ஸ்க்ருத பாரதி மாவட்டம் முதல் கிராமம் வரை பல நிலைகளில் செயல்படுத்தப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஸம்ஸ்க்ருத வகுப்புகள், முகாம்கள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் ஸம்ஸ்க்ருதம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், ஸம்ஸ்க்ருதம் பயிற்றுவிக்கும் நல்லாசிரியர்கள் பலரும் உருவாகியுள்ளனர்.
ஸம்ஸ்கிருத பாரதியின் பாலபாரதி என்ற அமைப்பு மூலம், பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஸம்ஸ்க்ருத வகுப்புகள் பள்ளிகளில் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகின்றன.
சாஸ்த்ரங்களைப் பற்றிய அறிவைப் பெற விரும்பும் குழந்தைகளுக்கு, ‘பாலகீர்வாணி’ (BALGIRVANI) வாயிலாக இணையவழியில் ஸமஸ்கிருதமும், சாஸ்த்ரங்களுக்கான அறிமுகமும் கற்பிக்கப்படுகின்றன. கிராமப்புற மக்களும் ஸம்ஸ்க்ருத மொழியை அறிந்து கொள்ளும் வகையில், கிராமப்புறங்களில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
2022ம் ஆண்டில், பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் நிறைவுற்றதை முன்னிட்டு, ‘ஸம்ஸ்கிருத பாரதி’ அமைப்பானது, 2022 டிசம்பர் மாதம் முழுவதும் ‘கீதாம்ருதம்’ எனும் ஒரு மாத கால நிகழ்ச்சியைப் பெரும் கோலாகலத்துடன் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா, ‘சின்மயா மிஷன்’ உடன் இணைந்து, ‘சின்மயா பாரம்பரிய மையத்தில்’ நடைபெற்றது. அன்றைய தமிழக ஆளுநர் மேதகு. ஆர்.என்.ரவி அவர்கள் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஒரு மாதம் முழுவதும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், முழு பகவத் கீதைiயும் பாராயணம் செய்தனர். ‘கீதாம்ருதம்’ நிகழ்ச்சியின் நிறைவு விழா, அன்றைய குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் முன்னிலையில், மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.
ஸமஸ்கிருதத்தில் உரையாடும் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் மொழி மற்றும் விழிப்புணர்வு வகுப்புகள் இங்கு நடைபெறுகின்றன. இந்த வகுப்பு, ஒரு வாரம் நடைபெறும். தங்கும் வசதியுடன் கூடிய வகுப்பாகும். ஒவ்வொரு ஆண்டும், ஸமஸ்கிருதத்தின் மீது பெருமிதம் கொண்ட சுமார் 150 பேர் கலந்து கொள்கின்றனர்.
சமூகத்தில் ஸமஸ்கிருதம் கற்பிக்க விரும்புவோருக்கு, ஸமஸ்கிருத பாரதி ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும் தங்கிப் பயிலும் ஆசிரியர் பயிற்சி முகாமை நடத்துகிறது. கற்பித்தல் திறன், சம்பாஷண சிபிராம்களை நடத்தும் செயல்முறை, ‘ஸமஸ்கிருத பாரதி’யின் கோட்பாடுகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
அகில பாரத மாநாடு 2025
நவம்பர் 2025ல், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டிமடை ஸ்ரீ அம்ரிதா பல்கலைக்கழகத்தில், ஸம்ஸ்கிருத பாரதியின் அகில பாரத மாநாடு நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து 3,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.
வரும் ஆண்டுகளில் நமது கவனம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த சிந்தனைகளும், விவாதங்களும் இம்மாநாட்டில் இடம்பெற்றன.
- 1,20,000 சம்பாஷண சிபிரம் (SPEAK SAMSKRIT) வாயிலாக 1 கோடிக்கும் அதிகமானோருக்கு ஸம்ஸ்கிருதம் பேசப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, நாடாளுமன்ற வளாகத்திலேயே ஒரு தனித்துவமான ‘ஸம்ஸ்கிருதம் பேசும் முகாம்’ நடத்தப்பட்டது.
- ஸம்ஸ்கிருத மொழியின் வாயிலாகவே கற்பிப்பதற்காக 70,000க்கும் மேற்பட்ட ஸம்ஸ்கிருத ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
- முந்நூறுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ‘ஸம்ஸ்கிருத இல்லங்கள்’ உருவாக்கப் பட்டுள்ளன.
- நான்கு தொலைதூரக் கிராமங்களை, உயிர்த்துடிப்பு மிக்க ‘ஸம்ஸ்கிருதக் கிராமங்களாக’ உருமாற்றியுள்ளது.
- உலகம் முழுவதும் 27 நாடுகளில் அமைந்துள்ள 2,000 மையங்கள் வாயிலாக ஸம்ஸ்கிருதத்தைப் பரப்பி வருகிறது.
- பெங்களூரில் 2011ம் ஆண்டில் வரலாற்றிலேயே முதன்முறையாக நடைபெற்ற ‘உலக ஸம்ஸ்கிருத புத்தகக் கண்காட்சியை’ ஏற்பாடு செய்தது.
1981ல் தொடங்கிய இந்த அமைப்பு, 2031ல் தனது 50வது ஆண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாட உள்ளது. இதன் மூலம் கடந்த கால சாதனைகளை நினைவுகூறவும், எதிர்கால இலக்குகளை உருவாக்கவும் ஒரு பாலமாக இந்த நிகழ்ச்சி நிச்சயமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஸம்ஸ்க்ருத பாரதி ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது ஒரு மொழி மறுமலர்ச்சி இயக்கம், மொழியை வாழ்வோடு இணைத்து, மக்களிடையே பரப்பும் இந்த முயற்சி, ஸம்ஸ்க்ருதத்தை மீண்டும் சமூகத்தின் இயல்பான பகுதியாய் மனித குலத்தின் உயரிய மொழியாக மாற்றும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழகம் வாழ் ஹிந்து சகோதர சகோதரிகளும் குறிப்பாக தமிழகம் வாழ் பிராமண சமூகத்தின் சகோதர சகோதரிகள் சமஸ்கிருத மொழி அறிவினை பெற்றுக் கொண்டிடவும் வளர்த்துக் கொண்டிடவும் இன்னமும் பெரிய அளவில் முன் வர வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
நன்றி !
இங்ஙனம்
உங்கள் அன்பு சகோதரன்
திருவொற்றியூர்
என்.நாராயணன்
மாநிலத் தலைவர்
E-mail : ungalnarayanan@gmail.com
Thambraas State Head Quarters
Whatsapp Numbers : 81480 11172 /
81480 11106 (10.00 am to 6.00 pm)