நமஸ்காரம்.
தமிழை தாய்மொழியாகக் கொண்ட பிராமண சமூகத்தினரின் அகங்களில் நாம் பேசி வந்த, தொடர்ந்து பேசி வருகின்ற பிராமண பாஷையினை சிலர் நக்கலடிப்பதை நாம் தொடர்ந்து சந்தித்து வருகின்றோம்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் சகோதர, சகோதரிகள் வெவ்வேறு வகையாக தமிழை உச்சரிப்பதனை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.
திருநெல்வேலி தமிழ், மதுரை தமிழ், செட்டிநாட்டுத் தமிழ், கொங்கு நாட்டுத் தமிழ் மற்றும் சென்னை தமிழ் ஆகிய பல வகையில் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது வார்த்தை பிரயோகங்களையும், உச்சரிப்புகளையும் கையாண்டு வருவதனை நாம் நன்கறிவோம்.
அவ்வாறு இருக்கையில் ஏன் பிராமணர் தமிழ் மட்டும் பரிகசிக்கப்படுகின்றது என்பதனை நமது சங்கத்திற்கு உற்ற தோழனாக விளங்கிய அமரர் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களிடம் கேட்ட போது அவர் இது பற்றி புத்தகம் வெளியிடுவோம் என்று கூறினார். ‘அந்தணர் அகத்தில் அருந்தமிழ்’ என்கின்ற புத்தகத்தினை வெளியிட்டு உதவினார்.
நமது சங்கத்தின் பல்நிலை நிர்வாகிகளும், தாம்ப்ராஸ் மாத இதழ் வாசகர்களும் மற்றும் ஏனைய தமிழ் பிராமண சகோதர சகோதரிகளும் தெரிந்து கொள்ளும் வகையில், புரிந்து கொள்ளும் வகையில் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் ‘அந்தணர் அகத்தில் அருந்தமிழ்’ என்கின்ற புத்தகத்தில் எழுதிய முகவுரையினை கீழே கொடுத்துள்ளேன்.
முழுவதுமாக படித்து, தெரிந்து, தெளிந்து துணிவுடன் பரிகசிப்பவர்களை எதிர் கொண்டிடுவோம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களின் முகவுரை :
‘அந்தணர் அகத்தில் அருந்தமிழ்’ என்னும் இந்நூல் அந்தணர்களின் பேச்சுவழக்குத் தமிழில் புழங்கும் சொற்கள் பற்றியது. அந்தச் சொற்கள், செந்தமிழ்ச் சொற்களின் பழகுதமிழ் வடிவங்கள் என்பதை இந்நூல் நிலைநாட்டுகிறது. இவ்வகையில் அந்தணர்கள் பல அரிய பழந்தமிழ்ச் சொற்களைப் பேச்சுவழக்கில் வைத்துக் காக்கிறார்கள் என உணரலாம்.
‘அந்தணர் அகத்தில் அருந்தமிழ்’ என்னும் தலைப்பிலுள்ள ‘அகத்தில்’ எனும் சொல்லுக்கு ‘இல்லத்தில்’ என்ற பொருளும் இருக்கிறது. ‘உள்ளத்தில்’ என்ற பொருளும் உள்ளது.
அந்தணர்கள் பேச்சுவழக்கில் கொண்டுள்ள செந்தமிழ்ப் பழகுதமிழ்ச் சொற்களை ‘பிராமண பாஷை’ என்பதாகச் சொல்லிக் கேலி பேசுவோர் இன்னும் சிலர் உளர். அவர்கள் ‘செறிவான செம்மைப் பழந்தமிழ்ச் சொற்களை அந்தணர்களுக்கே தத்தம் செய்து கொடுக்கிறார்கள்’.
இப்பொழுது கிடைக்கும் பழந்தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம். அந்நூலாசிரியராகிய தொல்காப்பியர் அகத்தியரிடம் தமிழ் பயின்றவர். அவருடன் பதினொரு மாணவர்கள் அகத்தியரிடம் தமிழ் பயின்றனர். அவர்களில் ஒருவர் செயிற்றியனார் என்ற புலவர் பெருமான். செயிற்றியனார் இயற்றிய செய்யுளிலக்கண நூலின் பெயர் செயிற்றயம் என்பது. அந்நூலில் எவ்வெந் நிகழ்வுகளால் சிரிப்பு வரும் என்பது பற்றிய ஒரு சூத்திரம் (நூற்பா) உள்ளது. அதில் நகைச்சுவைக்கு ஏதுவாகிய நிகழ்ச்சிகளாக இருபது நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்விருபதில் பதினைந்தாவதாகக் குறிப்பிடப்பெறுவது
‘ஆரியர் கூறும் தமிழின் கண்ணும்’
என்பது. இத்தொடரை மட்டும் பார்த்தால் ‘அந்தணர்கள் தமிழில் பேசினால் சிரிப்பு வரும்’ என்பதான பொருளே புலப்படும். செயிற்றிய நூற்பா அப்படிச் சொல்லவில்லை. செயிற்றிய நூற்பா நாடக வழக்கு நூற்பா.
‘முடவர் செல்லும் செலவின் கண்ணும்
மடவோர் செல்லும் சொல்லின் கண்ணும்’
என்பனவெல்லாம் அவர்களைப் போலப் பிறர் நடிக்கம்போது சிரிப்பு வரும் என்பதால் ஆரியர் தமிழ் பேசுவதுபோலப் பிறர் பேசிக் கேட்க நேர்ந்தால். அவர்களின் உச்சரிப்பில் நேர்த்தி இராதாகையால்
(ஸ்ப-ஷ்டமாக இராதாகையால்) சிரிப்பு வரும் என்பேத அதன் கருத்து. ஆரியர் என்பது பண்படியான பெயர்ச்சொல். அது தலைமைப் பண்பையும் அதற்கேதுவாகிய குணநலன்களையும் குறிக்கும் என்பதையும் கூடுதல் தகவலாக அறிதல் தரும். இவ்வமைப்பால் அந்தணர்களை ‘ஆரியர்’ எனக் குறிப்பிடுவது தொன்று தொட்ட வழக்கமேயாகும் என அறியலாம்.
‘அந்தணர்’ என்பது அந்தண்மை உடையவர்கள் என்ற பொருளுடையது.
‘அந்தணர் என்போர் அறவோர்; மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்’
என்ற தெய்வப் புலமைத் திருவள்ளுவர், அருளுடைய துறவிகளை அந்தணர் என்றார். அருளுடைமை என்ற குணத்தாலாகிய இச்சொல், அருளுடையார் யாவராயினும் அந்தணர் எனக் குறிக்கத்தக்கவரே என உணர்த்துகிறது.
பார்ப்பார் என்ற சொல் பிறப்புக் காரணமாக அமைந்த பெயர். இருபிறப்பாளர் என்னும் பொருளுடைய இச்சொல்லே சங்க நூல்களில் பல இடங்களிலும் வருவது. பார்ப்பான் ஒருமை; பார்ப்பார் - பன்மை. மரியாதைக்கான விகுதி பெற்றதும் ஆம்.
‘மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’
என்ற வள்ளுவர் வாய்மொழி, வேதக்கல்வியைக் காட்டிலும் பிராமணீயமே அந்தணனுக்கு இன்றியமையாதது எனக் கூறுவதாகும். இங்கே பார்ப்பான் என்ற சொல் வேதக்கல்வி கற்கும் இரு பிறப்பாளன் என்ற பொருளில் வருகிறது. இச்சொல் பற்றி இந்நூலில் மேலும் பல விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் பார்ப்பான் என்ற சொல்லே, அந்தணர்களைக் குறிப்பிடும் சொற்களில் அந்தணர்களை வியந்து பாராட்டும் சொல் என்னும் கருத்தை இந்நூலை முற்றக் கற்ற பின் உணரலாம்.
வேதியர் என்ற சொல் தொழில் சார்ந்த சிறப்புப் பெயர். வேதம் சார்ந்த ஆறு தொழில்களுக்கு உடையவர்கள் வேதியர்கள். அறுதொழிலோர் என்பதும் இப்பொருள் தரும் பெயர்ச் சொல்லாகும்.
‘ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூன் மறப்பர்
காவலன் காவான் எனின்’
என்று திருவள்ளுவ நாயனாரின் திருவாக்கு, அந்தணர்களை அறுதொழிலோர் என்று குறிப்பிடுவதுடன், கொடுங்கோலன் ஆட்சியில் வேத நூல் மறக்கப்படும் என்ற விபரீத விபத்தையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது.
தமிழக அந்தணர்களும் தமிழர்களே. தொன்று தொட்டு அவர்களின் தாய்மொழி தமிழேயாதலின் தமிழக அந்தணர்களைத் தமிழர்கள் என்பதே முறைமை. பிற மாநிலங்களின் மொழிக் குடும்பத்தினருள்ளும் அந்தணர்கள் உளர்; ஆகையால் தமிழ்நாட்டில் வேறு பிரித்துக் கூறும் பழக்கம ஏற்பட்டது போலும். வேறு சில ஆதாரங்களைச் சிந்தித்தால் அக்காரணம் மறையும். இந்நூலின் நோக்கம் அதுவன்று. எனவே இந்நூலில் ‘அந்தணத் தமிழர்கள்’ எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.
இந்நூலினைக் கற்றுத் தமிழக அந்தணத் தமிழர்கள் தூற்றல்களுக்குத் துவளாமல் போற்றல்களுக்கு நன்றி சொல்லிப் பெருமித உணர்வுடன் நல்ல வண்ணம் வாழ்வார்கள் என்பது நிச்சயம்.
ஆதாரம் : ‘அந்தணர் அகத்தில் அருந்தமிழ்’ நூல்
நன்றி !
இங்ஙனம்
உங்கள் அன்பு சகோதரன்
திருவொற்றியூர்
என்.நாராயணன்
மாநிலத் தலைவர்
E-mail : ungalnarayanan@gmail.com
Thambraas State Head Quarters
Whatsapp Numbers : 81480 11172 /
81480 11106 (10.00 am to 6.00 pm)