அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே
 

நமஸ்காரம்.

தற்போது தமிழக அரசியலில் மிகவும் விவாதிக்கப்படுகின்ற விஷயமாக இருப்பது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையும், தமிழக அரசின் இருமொழிக் கொள்கையும் தான்.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த விஷயத்தினை நாம் அனைவரும் துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நமது இளைய தலைமுறையினருக்கு இதன் நுணுக்கத்தினை எடுத்துச் சொல்லிட முடியும்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று திமுகவையும், அதிமுகவையும் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கூறியதனை நினைவு கூற வேண்டிய காலகட்டம் இது. ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் தங்களை இருமொழிக் கொள்கையாளர்கள் என்று சொல்லிக் கொண்டு அதற்கான காரணம் ஹிந்தி திணிப்பினை எதிர்ப்பது தான் என்று கதை புனைந்து வருகின்றனர்.

தற்போது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கக்கூடிய புதிய கல்வித் திட்டம் என்பது அனைத்து மாநிலங்களாலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். பாஜக அல்லாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசுகளும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை ஏற்று அமல்படுத்தி வருகின்றன.

தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளும் மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தினையும் குறிப்பாக மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக்கொண்டுள்ளன.

தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் இருமொழிக் கொள்கை ஓர் மாபெரும் பித்தலாட்டம். ஏனென்றால் அவர்கள் இந்த இருமொழிக் கொள்கை என்றும் கொள்கையினை அரசுப் பள்ளிகளுக்கும், அரசு உதவிபெறுகின்ற பள்ளிகளுக்கும் மட்டும் தான் கடைப்பிடிக்கின்றார்கள் என்பது எவ்வாறு ஓர் தமிழர் விரோத நிலைப்பாடு என்பதனை நாம் வெளிக்கொண்டு வந்திட வேண்டும். தமிழகமெங்கும் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறுகின்ற பள்ளிகள் ஆகியவைகளில் கல்வி கற்கின்ற ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தான் இருமொழிக் கொள்கை என்பது எப்பேர்ப்பட்ட துரோகம் என்பதனை மக்களிடம் எடுத்துச் சென்றிட வேண்டும்.

வெட்கம் கெட்ட திமுகவினர் மற்றும் அதிமுகவினருடைய அனைத்து நிலை நிர்வாகிகளின் பிள்ளை, பெண், பேரன், பேத்தி ஆகியோர் எல்லாம் மும்மொழி கொள்கையினை கடைப்பிடிக்கின்ற கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார் CBSE பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் தங்கள் குடும்ப வாரிசுகள் நடத்துகின்ற மும்மொழிக் கொள்கையினை கடைப்பிடிக்கின்ற பள்ளிகளை தமிழகமெங்கும் நடத்தி வருகின்றனர். இந்த பள்ளிகளின் வருமானம் பாதித்து விடக்கூடாது என்பதற்காக அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இருமொழிக் கொள்கையினை திணித்து சுயலாபம் பெறுகின்றனர்.

பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைமுறைப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது உண்மைதான். ஆனால் அந்த மூன்றாவது மொழி ஹிந்தியாக மட்டும் தான் இருந்துதிட வேண்டும் என்று சொல்லப்படவில்லை. இந்த உண்மையினை பல தருணங்களில் மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் தெளிவுபடுத்தி உள்ளனர். இருப்பினும் ஏமாற்று அரசியல் பிழைப்பு நடத்துகின்ற திமுகவும் அதிமுகவும் இந்த விஷயத்தில் பொய்களை பரப்பி மக்களை ஏமாற்றி தங்களுடைய குடும்ப வாரிசுகள் நடத்துகின்ற மும்மொழி கொள்கையினை கடைப்பிடிக்கும் பள்ளிகளின் கோடிக்கணக்கான வருமானத்தினை பாதுகாத்துக்கொள்ள ஒற்றுமையோடு எத்தனிக்கின்றனர்.

மீண்டும் உறுதியுடன் தெளிவுபடுத்திட விரும்புகின்றேன். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருக்கின்ற மூன்று மொழிக் கொள்கையில் முதலில் தாய்மொழி, இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது ஏதேனும் ஓர் இந்திய மொழி என்பது தான். அந்த 3வது மொழியாக தெலுங்கோ, கன்னடமோ, மலையாளமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியினை மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

இருமொழிக் கொள்கையினை கடைப்பிடித்திடும் கழக அரசியல் வியாபாரிகளின் எண்ணம் என்பது - என்னதான் தெலுங்கினையோ, மலையாளத்தினையோ கன்னடத்தினையோ 3வது மொழியாக வாய்ப்பு மொழியாக கொடுத்தாலும், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் ஹிந்தி மொழியினை கற்றுக் கொள்ளத்தான் முன் வருவார்கள் என்பது இவர்களது அச்சம். அப்படிப்பட்ட மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு கழக அரசியல் வியாபாரிகளின் குடும்பங்கள் நடத்துகின்ற பள்ளிகளின் எதிர்காலத்திற்கு சவாலாக அமைந்திடும் என்பதனை அவர்கள் எண்ணி அஞ்சுகின்றனர்.

தற்போது தமிழகத்தில் ஓர் மாபெரும் ஹிந்து விழிப்புணர்வு வாக்காளர்களிடையே உருவாகி வருகின்றது. மேலும் தேசிய சிந்தனையும் மிக அதிக அளவில் பெருகி வருகின்றது. இதற்கு காரணமாக விளங்குவது மத்திய பாஜகவினுடைய ஆட்சியும், மற்றும் அதன் கொள்கைகளும் திட்டங்களும் தான்.

1967ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இருக்கக்கூடிய திராவிட கட்சிகளின் ஆட்சி முடிவு நிலைக்கு வந்திடும் என்கின்ற அந்த அபாய உணர்வு தான் திமுகவையும், அதிமுகவையும் இந்த இருமொழிக் கொள்கையில் கள்ளக்கூட்டணியில் வைத்துள்ளது.

தமிழக பிராமண சமூகத்தினர் ஆகிய நாம் பல காலகட்டங்களில் - காங்கிரஸ் கட்சிக்கு, திமுக கூட்டணிக்கு மற்றும் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வந்துள்ளோம். எதிர்காலத்தில் தக்க முடிவு எடுத்திடுவோம்.

இந்த திராவிடக் கட்சிகளின் மொழிக் கொள்கை என்பது தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாக அமைந்துள்ளதனை நன்கு புரிந்து கொண்டிட வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வினை நாம் அனைவரிடமும் உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நன்றி !

நன்றி !

இங்ஙனம்

உங்கள் அன்பு சகோதரன்

திருவொற்றியூர்

என்.நாராயணன்

மாநிலத் தலைவர்

E-mail : ungalnarayanan@gmail.com

Thambraas State Head Quarters

Whatsapp Numbers : 81480 11172 /

81480 11106 (10.00 am to 6.00 pm)




Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS